×

தமிழக அரசின் பணிகளில் திருப்தியில்லை உள்துறை, சுகாதாரத்துறை செயலாளர்கள், சிறப்பு டிஜிபி மீது தலைமை தேர்தல் ஆணையர் கடும் தாக்கு

சென்னை: தமிழக அரசின் பணிகளில் திருப்தியில்லை என்று கூறி உள்துறை, சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும் மதுவிலக்கு சிறப்பு டிஜிபி மீது தலைமை தேர்தல் ஆணையர் கடும் கண்டனம் தெரிவித்து பேசினார். இது அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழக அரசு அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது வழக்கத்தை விட அதிகாரிகள் மீது தலைமை தேர்தல் ஆணையர் கடுமையாக குற்றம்சாட்டி பேசினார். அதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம், ‘உங்கள் துறையில் ஏன் 12 ஆயிரம் காலியிடங்களை வைத்துள்ளீர்கள்’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளித்த ராதாகிருஷ்ணன், ‘பணி நியமனம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில்’ உள்ளது என்றார். அது வேறு விவகாரம். நீங்கள் பிரச்னையை திசை திருப்ப வேண்டாம். தேர்தல் நேரத்தில் இவ்வளவு காலிபணியிடங்களை வைத்திருக்கலாமா என்று கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

அதைத் தொடர்ந்து உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரிடம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, மதுவிலக்கு பிரச்னைகள் உள்ளன. நீங்கள் சரியாக கவனிக்கவில்லை. கண்காணிக்கவும் இல்லை. உங்களுக்கு வேலை செய்யத் தெரியவில்லை. நீங்கள் எதற்கும் பயன் இல்லாத அதிகாரி. சட்டம் ஒழுங்கும் மோசமாக உள்ளது. அதை எல்லாம் கண்காணிக்கவில்லை. தமிழக போலீசில், தகுதி உள்ள அதிகாரிகளுக்கு ஏன் பதவி உயர்வு கொடுக்கவில்லை. தேர்தல் நெருங்குகிறது. இனி ஒரு வாரத்தில் அவர்களுக்கெல்லாம் பதவி உயர்வு உங்களால் வழங்க முடியுமா? தேவையில்லாமல் போலீசில் உயரதிகார மட்டத்திலான பதவியை காலியாக ஏன் வைத்துள்ளீர்கள் என்று சரமாரியாக கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்துள்ளார்.
அதேபோல, தமிழக டிஜிபி திரிபாதியைப் பார்த்து, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. ரவுடிகள் சுதந்திரமாக சுற்றுகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை. எனக்கு சட்டம் ஒழுங்கு பணியில் திருப்தியில்லை என்று கடுமையாக கூறினார். ஆனால் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியிடம் இது குறித்து ஒரு கேள்வி கூட கேட்கவில்லை.

பின்னர் மதுவிலக்கு சிறப்பு டிஜிபி ஷகீல் அக்தரைப் பார்த்து, தமிழகத்தில் கள்ளச்சாராயம் அதிகமாக விற்பனையாகிறது. அது தொடர்பாக சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. போலி மது விற்பனை செய்யும் பெரிய விஐபிக்களை கைது செய்யவில்லை. எளியவர்களைத்தான் கைது செய்துள்ளீர்கள். உங்களிடம் தெளிவான விளக்கம் இல்லை. தேர்தல் நேரத்தில் அதிக அளவில் மதுவை பலர் வாங்கி பதுக்கி வைத்துள்ளனர். தேர்தல் நேரத்தில் அவற்றை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினார் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா. நான் சொன்ன குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. தமிழக அரசு நிர்வாக செயல்பாடு திருப்தியாக இல்லை. அதனால், தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நான் சொன்ன குற்றச்சாட்டுகள் குறித்து நாளை(இன்று) காலை 11 மணிக்குள் தீவிரமாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, எனக்கு அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறினார்.

தலைமை தேர்தல் ஆணையருக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்தியப் பிரதா சாகு, சில அறிக்கைகளை கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில்தான் சுனில் அரோரா இவ்வாறு பேசியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அதிகாரிகளை தலைமை தேர்தல் ஆணையர் நேரடியாக கேள்விகளை கேட்டது கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Chief Election Commissioner ,Home ,Health Secretaries , Chief Election Commissioner lashes out at Home, Health Secretaries, Special DGP
× RELATED குறைந்த வாக்குப்பதிவு நடைபெறும்...