ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் உள்ள சேத்திடல், கூடலூர் ஆகிய பகுதிகளில் நேற்று காலை மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் கலந்துகொண்டு மினி கிளினிக்கை திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் வரவில்லை.
இதுகுறித்து கருணாஸ் எம்எல்ஏ கூறுகையில், ‘‘மினி கிளினிக் திறப்பு விழா அரசு விழா போன்று இல்லாமல், அதிமுக கட்சி விழா போல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால்தான் அப்பகுதியில் விழாவிற்கு செல்லவில்லை’’ என தெரிவித்தார். இவரது இந்தப் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்குலத்தோர் புலிப்படை தலைவரான கருணாஸ், கடந்த சட்டமன்ற தேர்தலில் திருவாடானை தொகுதியில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். கடந்த சில நாட்களாக சசிகலாவிற்கு ஆதரவாக வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் அரசு விழாவை புறக்கணித்ததோடு, அதிமுக விழாபோல் நடந்ததாக கருணாஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.