×

ஆவடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது

ஆவடி: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், மணல் ஓடை தெருவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நேற்று முன்தினம் இரவு திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து, போலீசார் மாறுவேடத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 வாலிபர்கள் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தனர். அவர்களை  பிடித்து  விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தனர். மேலும், அவர்களில் ஒருவர் வைத்திருந்த கைப்பையை போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது, அந்த பையில் 2 கிலோ எடை கொண்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் கஞ்சா, 3 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர், மேலும் விசாரணையில் அவர்கள் கீழ் மதுரை, காமராஜர்புரத்தைச் சேர்ந்த ஜோசப் ஆரோக்கியம் (23), அதே பகுதியை சேர்ந்த வெற்றிவேல் பாண்டி (23) கீழ் மதுரை, சிவகங்கை மெயின் ரோட்டை சேர்ந்த காளீஸ்வரன் (24) ஆகியோர் என தெரியவந்தது. மேலும்,   மூவரும் மதுரையில் இருந்து பஸ்சில் சென்னைக்கு கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர். பின்னர், அவர்கள் அம்பத்தூர், திருமுல்லைவாயல் பகுதிகளில் விற்பனை செய்தது தெரிய வந்தது.

கள்ளிக்குப்பம் சுங்கச்சாவடி அருகே போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது பைக்கில் இரு வாலிபர்கள் சந்தை வேகமாக வந்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் வழிமடக்கி சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் கொண்டு வந்த கைப்பையில் ஒரு கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் கஞ்சா, பைக்கை பறிமுதல் செய்து இருவரையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அதில், முகப்பேர் கிழக்கு, பன்னீர் நகரை சேர்ந்த சந்திரசேகர் (25), அதே பகுதி, நக்கீரர் தெருவை சேர்ந்த பிரவீன்குமார் (22) ஆகியோர் என தெரியவந்தது. மேலும், இருவரும் செங்குன்றத்தில் இருந்து முகப்பேர் பகுதிக்கு கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது.


Tags : Avadi , Avadi, cannabis, sale, arrest
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!