×

மாணவன் கைவண்ணத்தில் தயாரான சாக்பீஸ் 16 கால் கோயில் மண்டபம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஓட்டல் வளாகத்தில், அரசு அருங்காட்சியகம் இயங்குகிறது. இங்கு, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு, சாக்பீஸ்களில் சிற்பங்கள் செய்ய இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பயிற்சி பெற்ற, காஞ்சிபுரம் பக்தவத்சலம் தொழில்நுட்ப கல்லுாரி மாணவர் கோகுல், சாக்பீஸ் துண்டுகளில், 1 அடி அகலமும், 1 அடி உயரமும் உடைய, 16 கால் கோயில் மண்டபத்தை உருவாக்கியுள்ளார். அந்த மண்டபத்தின் மையப்பகுதியில் மூலவர் சிவலிங்கமும், லிங்கத்தின் மேல்பகுதியில் இருந்து தண்ணீர் கொட்டுவது போன்ற அமைப்பும், லிங்கத்துக்கு எதிரே நந்தி வாகனமும் உள்ளது.

மண்டபத்தின் வெளிப்புற 4 மூலைகளிலும், அலங்காரத்துடன் கூடிய தொங்கும் சங்கிலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பம், தற்போது அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவன் கோகுல் கூறுகையில், காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக மாதிரி அமைப்பு கலைஞர் அசோகன் அளித்த பயிற்சியும், என் தாய் அளித்த ஊக்கத்தால், 16 கால் கோயில் மண்டபம் செய்ய முயற்சித்தேன். மொத்தம், 560 சாக்பீஸ் மூலம், 3 மாதங்களில் இதனை செய்து முடித்தேன். 2 முறை செய்யும்போது, கோயில் மண்டபத்தின் மேற்கூரை பகுதி உடைந்து விட்டது. 3வதாக விடா முயற்சியுடன் செய்து முடித்தேன் என்றார்.


Tags : Student, Sockeyes, 16-foot Temple Hall
× RELATED மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு