×

தமிழகத்தில் விரைவில் தேர்தல் வருவதையொட்டி அரசியல் கட்சியினரின் பண பரிமாற்றத்தை வருமான வரி துறை அதிகாரிகள் உடனடியாக கண்காணியுங்கள்: தலைமை தேர்தல் ஆணையர் அதிரடி உத்தரவு

சென்னை : தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வருவதையொட்டி, அரசியல் கட்சியினரின் பணம் பரிமாற்ற நடவடிக்கையை உடனடியாக கண்காணிக்க வேண்டும் என்று வருமான வரி மற்றும்   அமலாக்க துறை அதிகாரிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று 2வது நாளாக சென்னையில் நடைபெற்ற ஆலோசனையின்போது உத்தரவிட்டுள்ளார்.தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல்   2021ம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரம் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 3 மாதமே உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில்   சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து ஆலோசனை செய்வதற்காவும், அதற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில்   தேர்தல் ஆணைய உயர்மட்ட குழுவினர் 2 நாள் பயணமாக நேற்று காலை சென்னை வந்தனர்.

சென்னை வந்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று மதியம், சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளை சந்தித்து   அவர்களின் கருத்துக்களை தனித்தனியாக கேட்டார். அதன்படி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, மார்க்சிய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட 10 கட்சி நிர்வாகிகள் தேர்தல்   ஆணைய அதிகாரிகளை சந்தித்து தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்தனர். இதில் அனைத்துக்கட்சி நிர்வாகிகளும், ”தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். 80 வயதுக்கு மேல்   உள்ளவர்களுக்கு தபால் வாக்கு நடைமுறையை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது. தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர். அதேபோன்று,   அதிமுக சார்பில், `தமிழகத்தில் மே மாதம் வெயில் அதிகளவில் இருக்கும் என்பதால் ஏப்ரல் 4வது வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். 80 வயதை கடந்தவர்கள் தபால் வாக்கு அளிக்கலாம்”  என்றனர்.குறிப்பாக அதிமுக தவிர அனைத்து எதிர்க்கட்சி நிர்வாகிகளும், ”தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. போலீசார் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக  செயல்படுவதால்  இதை தடுக்க முடியவில்லை. இந்த தேர்தலிலாவது இதற்கு ஒரு சரியான தீர்வு காண வேண்டும்” என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் வலியுறுத்தினர்.

இதையடுத்து டெல்லியில் இருந்து வந்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் உயர்மட்ட குழுவினர் இன்று 2வது நாளாக காலை 10.30 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள   ஓட்டலில் தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, தமிழக வருமான வரித்துறை மற்றும் அமலாக்க துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை இன்று   மதியம் 1 மணி வரை நடைபெற்றது.இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை மற்றும் சட்டமன்ற தேர்தலை எந்த தேதியில் நடத்தலாம் என்பது குறித்தும் கருத்துக்களை   கேட்டனர். வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தும்போது, ”தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை   தேர்தல் ஆணையம் தடுக்க முடியவில்லை என்று ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். அதனால், தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்பே, அதாவது உடனடியாக   இப்போதே தமிழகத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பண பரிமாற்றங்களை கண்காணிக்க வேண்டும். குறிப்பாக அவர்களின் வங்கி கணக்கில் இருந்து வழக்கத்துக்கு அதிகமாக   பணம் எடுத்தால் வங்கி அதிகாரிகள் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்ற வேண்டும். அப்படி பணம் பரிமாற்றம் இருந்தால் கட்சி பாகுபாடின்றி   உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.



Tags : elections ,Tamil Nadu ,Income Tax Department , தேர்தல் ஆணையர்
× RELATED நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு சென்ற...