×

ஆட்டோவில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!: தெலங்கானாவில் கல்லூரி மாணவி 5 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை..!!

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே கல்லூரி மாணவி ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மெட்சல் மாவட்டத்தில் உள்ள கத்யஸர் என்ற பகுதியில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. தெலங்கானாவில் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவி பகுதி நேரமாக அங்குள்ள மெடிக்கல் ஷோரூமில் வேலை பார்த்து வந்துள்ளார். தினசரி அங்கிருந்து அவரது ஊருக்கு ஆட்டோவில் செல்வது வழக்கம். அதன்படி நேற்று மாலை பணி முடிந்து ஆட்டோவில் செல்லும் போது ஆட்டோவானது திடீரென திசை மாறி சென்றுள்ளது. இதுகுறித்து தனது தாயாருக்கு மாணவி தகவல் தெரிவித்திருக்கிறார்.

இதன் அடிப்படையில் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். மாணவியின் தொலைபேசி சிக்னலை வைத்து காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது நெடுஞ்சாலையில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்குள் மாணவி நிர்வாணமாக தலையில் காயங்களுடன் இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் தாக்குதலுக்குள்ளான மாணவியை உடனடியாக மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கல்லூரி மாணவி 5 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவி அளித்த தகவலில் அடிப்படையில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஆட்டோவில் சென்றபோது கல்லூரி மாணவி ஒருவர் அடித்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : gang ,Telangana ,college students , Auto, Telangana, College Student, Collective Sexual Abuse
× RELATED தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து..!!