புதுடெல்லி,: முக்கிய துறைமுகங்களை தனியார்மயமாக்குவது தொடர்பான, துறைமுகங்கள் அதிகார மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. முக்கிய துறைமுகங்கள் அதிகார மசோதா- 2020 கடந்தாண்டு செப்டம்பர் 23ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மாநிலங்களவையில் இந்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவிற்கு ஆதரவாக 84 எம்பிக்களும், எதிராக 44 பேரும் வாக்களித்தனர். இதன் மூலமாக நாட்டில் உள்ள 12 முக்கிய துறைமுகங்களின் ஒழுங்குமுறை, இயக்கம் மற்றும் திட்டமிடல் ஆகியவற்றை இந்த மசோதா வழங்கும். முக்கிய துறைமுகங்களில் நிர்வாகம், கட்டுப்பாடு மேலாண்மை ஆகியவற்றை துறைமுக ஆணையங்கள் வாரியத்துக்கு வழங்கும் இந்த மசோதா வகை செய்யும்.
இது குறித்த பிரச்னைகளுக்கு வாரியமே தீர்வு காணும். இந்த மசோதாவிற்கு திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், திமுக, ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் பிஜூ ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்தன.