×

தமிழக மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படையை மோடி கண்டிக்க வேண்டும்... தமிழக எம்.பி.க்களின் ஆவேச குரலுக்கு மத்திய அரசு விளக்கம்

டெல்லி : தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கொலை செய்யப்பட்டது குறித்து இலங்கை அரசின் விசாரணை அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.  மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறலை தடுக்க வேண்டும்.இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.கப்பல்கள் மோதியதால் தமிழக மீனவர்கள் இறந்தனர் என வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியது இலங்கையின் கருத்து,என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை, தமிழக மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படையை பிரதமர் மோடி கண்டிக்க வேண்டும்.இலங்கை கடற்படையின் அத்துமீறலை தடுக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இலங்கை கடற்படையால் 245 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.அதிகரிக்கும் மீனவர்கள் கொலைகளை தடுக்க இந்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன ?, என்றும் கேள்வி எழுப்பினார்.

தமிழக எம்பிக்களின் குரலுக்கு பதில் அளித்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜனவரி 18ம் தேதி இரு தரப்பின் படகுகள் மோதிக் கொண்டதால் இலங்கை கடற்படைக்கும், மீனவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 தமிழர்கள் உயிரிழந்தனர். இந்த பிரச்சனை ஏற்பட்டதும் இந்தியா இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நமது கண்டனத்தை அடுத்து, தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டது குறித்து விரிவான விசாரணைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணை அறிக்கையின் முடிவுகளுக்காக இந்திய அரசு காத்திருக்கிறது. அந்த முடிவுகளின் அடிப்படையில் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

இதையடுத்து பேசிய திருச்சி சிவா, இலங்கை அரசு பிடித்துவைத்துள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வினவினார்.இதற்கு பதிலளித்து பேசிய ஜெய்சங்கர், இலங்கை சிறையில் தற்போது  இந்திய மீனவர்கள் ஒருவரும் இல்லை என்றார். மேலும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள படகுகளில் முதற்கட்டமாக நல்ல நிலையில் உள்ள 62 படகுகளை மீட்க  இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.


Tags : Modi ,Tamil Nadu ,fishermen ,Sri Lankan Navy ,Central Government ,MPs , மத்திய அரசு
× RELATED தமிழ்நாடு முழுவதும் பாஜக அலை...