ரெய்ச்சூர்: ‘தேர்தலில் பண பலம் அதிகரித்து விட்டதால் சட்டப்பேரவை, மக்களவை இடைத்தேர்தலில் மஜத போட்டியிடாது,’ என்று இக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா தெரிவித்தார். இது குறித்து நேற்று அவர் கூறியதாவது: கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜ.வால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. மத்தியில் இரு கட்சிகளின் கூட்டணி கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. அந்த சமயத்தில் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜ கட்சிகளின் ஆட்சி இருந்தாலும் கட்சி தலைமையிடம் எந்த திட்டத்தையும் தைரியமாக கேட்டு பெற முடியவில்லை.
நமது பக்கத்து மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மாநில கட்சிகள் பலமாக இருப்பதால், மத்தியில் எந்த கட்சி கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் அதனுடன் இணைந்து மாநிலத்திற்கு தேவையான நிதியை பெற்று கொள்கிறார்கள். கர்நாடகாவில் அதுபோன்ற சூழ்நிலை ஏற்பட வேண்டுமானால் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை பலமான மாநில கட்சியாக உருவாக்க வேண்டியது அவசியமாகும். தேர்தலில் பண பலம் அதிகரித்துவிட்டதால் கர்நாடக பேரவை, மக்களவை இடைத்தேர்தலில் மஜத போட்டியிடாது. இவ்வாறு அவர் கூறினார்.