புதுடெல்லி: இந்திய கடற்படையில் நீண்ட காலம் சேவையாற்றிய ‘விராட்’ விமானத் தாங்கி போர் கப்பலுக்கு கடந்த 2017ல் ஓய்வு அளிக்கப்பட்டது. இதை குஜராத்தை சேர்ந்த ஸ்ரீராம் நிறுவனம், ரூ.38.54 கோடிக்கு ஏலம் எடுத்தது. பின்னர், மும்பையை சேர்ந்த ‘என்விடெக் மெரைன்’ என்ற தனியார் நிறுவனம், இக்கப்பலை அருங்காட்சியமாக மாற்ற விருப்பம் தெரிவித்து, ஸ்ரீராம் நிறுவனத்திடம் விலைக்கு கேட்டது. அதற்கு அந்த நிறுவனம் ரூ.100 கோடி கேட்டது. இதற்கு என்விடெக் நிறுவனம் பேரம் பேசவே, ஸ்ரீராம் நிறுவனம் இக்கப்பலை குஜராத்தில் உள்ள அலாங் கப்பல் உடைக்கும் தளத்துக்கு எடுத்துச் சென்ற உடைக்க தொடங்கியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் என்விடெக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதை நேற்று தலைமை நீதிபதி பாப்டே அமர்வு விசாரித்தது. பின்னர், கப்பலை உடைப்பதற்கு தடை விதித்த பாப்டே, மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரையில் கப்பலை தற்போதுள்ள நிலையிலேயே வைக்க உத்தரவிடப்பட்டது.