×

திண்டிவனம் அருகே சாலையில் சுற்றித்திரிந்த சிறுவர்கள் பெற்றோரிடம் ஒப்படைப்பு

திண்டிவனம்: திண்டிவனம் அருகே சாலையில் சுற்றித்திரிந்த சிறுவர்களை மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பகுதியில் மூன்று சிறுவர்கள் சாலையில் சுற்றித் திரிந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் ரோந்து சென்ற ஒலக்கூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அர்ஜுனன் மூன்று சிறுவர்களையும் மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தார். பின்னர் சைல்டு லைனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஒலக்கூர் காவல் நிலையம் சென்ற திண்டிவனம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தமிழ்மணி, அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் புனிதவள்ளி, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி ஆகியோர் சிறுவர்களிடம் விசாரணை செய்தனர். விசாரணையில், அவர்கள் ஒலக்கூர் அடுத்த முருங்கை கிராம காட்டுப் பகுதியில் வசிக்கும் பழங்குடி இருளர் பகுதியை சேர்ந்த சங்கர்-வசந்தி தம்பதியரின் குழந்தைகளான வசந்த் (8), தனலட்சுமி (7), சுபலட்சுமி (5) என தெரியவந்தது. இதனையடுத்து வசந்தியை காவல் நிலையம் வரவழைத்து டிஎஸ்பி கணேசன் ஆலோசனையின் பேரில், அறிவுரைகள் கூறி, போலீசார் வாகனத்தில் அழைத்துச் சென்று அவர்களது குடியிருப்பில் ஒப்படைத்தனர்.

Tags : parents ,boys ,Tindivanam ,road , Tindivanam
× RELATED காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு