×

‘’தமிழகத்தில் வேலைவாய்ப்பை உறுதி செய்வோம்’’ 3 மாதத்தில் ஆட்சி மாற்றம் உறுதி மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்


பெரம்பூர்:திமுக தலைவரும் கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான மு.க.ஸ்டாலின் இன்று காலை கொளத்தூர் தொகுதியில் ஆய்வு பணி மேற்கொண்டார்.இதன்ஒருபகுதியாக, கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளுவர் சாலையில் ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்ற அனிதா அக்சீவர்ஸ் அகாடமி நிகழ்ச்சியில் பயிற்சி முடித்த 81 மாணவிகளுக்கு மடிக் கணினி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அந்த அகாடமியில் பயிற்சி பெற்றுவரும் 89 மாணவிகளுக்கு நோட்டு, பேனா வழங்கினார்.செம்பியம், லூர்து பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு திடலை மேம்படுத்தி, கூடைப்பந்தாட்ட கூடம் அமைக்க மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அங்கு பயிலும் 500 மாணவ-மாணவிகளுக்கு குடிநீர் பாட்டில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார். பந்தர் கார்டன் மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். அப்பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழர் தெருவில் ஆரம்ப சுகாதார மையத்தில் கூடுதல் கட்டிடத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மருத்துவர், செவிலியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை மேம்படுத்தும் பணியைத் துவக்கி வைத்து ஆசிரியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

64வது வார்டுக்கு உட்பட்ட பள்ளி சாலையில், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து  ₹23 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசினர் நடுநிலைப் பள்ளி கூடுதல் வகுப்பறை, குடிநீர் சுத்திகரிப்பு பணிகளை துவக்கிவைத்து மாணவ- மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 66வது வார்டு, ஜவஹர் நகர் பகுதியில் உள்ள தனது சட்டமன்ற அலுவலகத்தில் கல்லூரிமாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவி, 4 சக்கர வண்டி, மீன்பாடி வண்டி, திருமண உதவி என 50 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதன்பிறகு மு.க.ஸ்டாலின் பேசியதாவது;அனிதாவின் பெயரில் பயிற்சி மையத்தை கடந்த 2019ம் ஆண்டு துவங்கினேன். பெண்களின் கல்விக்காக இலவசமாக துவங்கப்பட்ட இந்த மையத்தில் பலர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இதனால் அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு 348 மாணவிகள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளனர். தற்போது 81 பேர் பயிற்சி பெறுகின்றனர்.
தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. லட்சக்கணக்கானோர் வேலையின்றி உள்ளனர். அதை பற்றி அதிமுக அரசு கண்டுகொள்வதில்லை. இன்னும் 3 மாதத்தில் ஆட்சி மாறவுள்ளது. அப்போது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்வோம். திமுக தலைவர் என்ற முறையில் சொல்கிறேன். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி ஏற்படுத்தப்படும். இது, திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். இவ்வாறு கூறினார்.இந்த நிகழ்ச்சியில் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி, முதன்மை செயலாளர் கே.என்.நேரு எம்எல்ஏ, வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் பிகே.சேகர்பாபு, ரங்கநாதன், தாயகம் கவி மற்றும் பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Tags : regime change ,Tamil Nadu ,MK Stalin , மு.க.ஸ்டாலின்
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...