×

திருவள்ளூர் மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 62 ஏக்கர் நிலத்தை பறிமுதல் செய்தது தமிழக அரசு..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 62 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு பறிமுதல் செய்தது. சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று அண்மையில் சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி ஆகியோர் விடுதலையாகி தமிழகம் திரும்பியிருக்கிறார்கள். இந்த சூழலில் தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின் படி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரது சொத்துக்களை தொடர்ந்து பறிமுதல் செய்து வருகிறது.

இதில் இளவரசி, சுதாகரனின் சொத்துக்கள் முதற்கட்டமாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள வேளகாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள 41.22 ஏக்கர் மதிப்பிலான நிலங்கள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்திக்குறிப்பு வெளியிட்டிருக்கிறார். 1995ம் ஆண்டு இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டு நிலங்கள் அனைத்துமே அக்ரோபார்ம் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சொத்துகுவிப்பு காலத்தில் வாங்கப்பட்ட சொத்துக்கள் என்பதால் இந்த நிலம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அரசுடமை ஆக்கப்பட்டிருப்பதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆதனால் இந்த சொத்துக்கள் மூலம் பெறப்படும் வருவாய் அனைத்தும் தமிழக அரசுக்கு சொந்தமாகும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.


Tags : Tamil Nadu ,Sudhakaran ,government ,land ,district ,Tiruvallur , Tiruvallur, Princess, Sudhakar, 62 acres of land, Government of Tamil Nadu
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...