×

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்'நிகழ்சியில் உதவி கேட்ட ஏழைப்பெண்!: ரூ. 2 லட்சம் நிதி வழங்கிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்..!!

விருதுநகர்: விருதுநகரில் மாற்றுத்திறனாளி மகனை பராமரிக்க முடியாமல் கருணை கொலைக்கு தயாரான விதவை பெண்ணின் குடும்பம் திமுக தலைவர் அளித்த 2 லட்சம் ரூபாய் நிதி உதவி மூலம் காப்பாற்றப்பட்டுள்ளது. விருதுநகர் வடக்கு மாவட்டம் பட்டம்புதூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்சியில் பங்கேற்ற ஆனையூரை சேர்ந்த பாண்டிதேவி என்ற விதவை பெண், தன் மாற்றுத்திறனாளி மகனுடன் வந்து உதவி கோரினார். அரசு அதிகாரிகள் பலரிடம் முறையிட்டும் எவ்வித பலனும் கிடைக்காததால் மாற்றுத்திறனாளி மகனை கருணை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்யும் நிலையில் இருப்பதாக அந்த பெண் கண்ணீருடன் கூறினார்.

ஆட்சிக்கு வந்ததும் தங்கள் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்று அந்த பெண் கோரிக்கைவிடுத்தாலும் ஆட்சிக்கு வரும் வரை காத்திருக்க தேவையில்லை என ஓரிரு நாளில் உதவி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். மு.க.ஸ்டாலின் அளித்த உறுதிமொழியின் படி நேற்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆனையூர் சென்று பாண்டிதேவி குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிதி உதவியை நேரில் வழங்கினார். இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ள பாண்டிதேவி, மாற்றுத்திறனாளி மகனை கருணை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்யவிருந்த தனது குடும்பத்தை திமுக காப்பாற்றியிருப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


Tags : Stalin ,constituency ,DMK , Stalin in your constituency, help, poor woman, Rs. 2 lakh fund, DMK
× RELATED ராமநாதபுரம் தொகுதி வேட்பாளரை...