டெல்லி : டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை பிரதமர் மோடி கொச்சைப்படுத்தி பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய அவர், நாட்டில் ஆட்சி செய்வது அம்பானியும், அதானியும் தான் என்று குறிப்பிட்டார். மக்களவையில் திருமாவளவன் பேசியதாவது, குடியரசு தலைவரின் உரை, உழைக்கும் மக்களுக்கு எதிராக அமைந்திருக்கிறது என்பதை வேதனையுடன் பதிவு செய்து கொள்கிறேன். இந்த அரசு மக்களுக்கான அரசு என்பதை விட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசாகவே இயங்கிக் கொண்டு இருக்கிறது.
மோடி அவர்களின் தலைமையிலான அரசு மக்களுக்கானது என்பதைவிட மோடி அவர்களின் நண்பர்களுக்கான அரசு, அதானி அரசு, அம்பானி அரசு என்று தான் மக்கள் விமர்சித்து கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளின் போராட்டம் 2.5 மாதமாக தொடர்ந்து டெல்லி எல்லை ஓரங்களில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. உலகமே இதை பார்த்து வியந்து கொண்டு இருக்கிறது. அமைதியான முறையில் அறவழியில் கட்டுப்பாடான வகையில் லட்சக்கணக்கான மக்கள் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக போராடி கொண்டு இருக்கிறார்கள்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கும் நிலையில் கூட, அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை உடனே இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுகிறேன். போராடி கொண்டு இருக்கும் மக்களை பிரதமர் மோடி கொச்சைப்படுத்தும் வகையில் விமர்சித்து இருக்கிறார். விவசாயிகளை போராட்டம் நடத்தும் கூலிகள் என்று மோடி விமர்சித்து இருக்கிறார். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். மக்களுடைய உணர்வுகளை மதித்து இந்த அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை உடனே இயற்ற வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன,என்றார்.