பழநி: வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.டி.உதயகுமார் நேற்று நேற்று காலை பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அடிவாரத்தில் முடி காணிக்கை செலுத்தினார். தொடர்ந்து படிப்பாதை வழியாக நடந்தே கோயிலுக்கு சென்றார்.
விஸ்வரூப தரிசனத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து திருஆவினன்குடி கோயில் மற்றும் பாத விநாயகர் கோயில்களில் தரிசனம் செய்தார். அப்போது அவரிடம் நிருபர்கள், ‘‘சசிகலா வருகையால் அதிமுகவில் பிளவு ஏற்படுமா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் மறுப்பு தெரிவிக்காமல் சிரித்தார்.
திடீரென முடி காணிக்கை செலுத்தியதற்கு என்ன காரணம்? என்று கேட்டதற்கும் பதில் அளிக்காமல் சிரித்தபடி சென்றுவிட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்தார். அப்போது, சசிகலா முதல்வராக பதவி ஏற்கவேண்டும் என முதல் ஆளாக குரல் கொடுத்தவர் அமைச்சர் உதயகுமார். இந்த சூழ்நிலையில் சசிகலா குறித்த கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்காமல் சிரித்துக்கொண்டே சென்றதும், சசிகலா வருகையை தொடர்ந்து முடி காணிக்கை செலுத்தி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.