புதுடெல்லி: கடந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல முறை தள்ளி வைக்கப்பட்ட ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசுக்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. ஆனால், கொரோனா அச்சம் காரணமாக பலர் தேர்வில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டுடன் வயது வரம்பு முடிந்தவர்கள், தேர்வில் பங்கேற்க இயலாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க கோரி பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் யுபிஎஸ்சி தாக்கல் செய்துள்ள புதிய பதில் மனுவில், ‘‘வயது வரம்பு முடிந்தவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க முடியாது.
அது தேர்வெழுதிய மற்றவர்களுக்கு பாகுபாடு காட்டியது போலாகும். அதே சமயம், தேர்வு எழுத முடியாமல் போன விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே மறுவாய்ப்பு அளிக்கப்படும்’’ என கூறப்பட்டுள்ளது. வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வை எழுதும் பொதுப்பிரிவினருக்கு 32 வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினருக்கு இதில் இருந்து தளர்வு வழங்கப்பட்டுள்ளது.