சென்னை: சசிகலாவுக்கு வரவேற்பு கொடுத்ததைப் பார்த்து பாமக நிறுவனர் ராமதாஸ், மறைமுகமாக தெருக்கூத்து என்று கிண்டலடித்துள்ளார். ஜெயலலிதாவின் தோழியும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் சித்தியுமான சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்றார். அவர் நேற்று முன்தினம் காலை 7.45 மணிக்கு புறப்பட்டு, நேற்று அதிகாலை 6.45 மணிக்கு வீட்டுக்கு வந்தார். வரும் வழியில் அவரை வரவேற்க ஏராளமான பொதுமக்களை திரட்டியிருந்தனர். இதற்காக பல கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் சசிகலா எதிர்பார்த்ததுபோல அதிமுக நிர்வாகிகள் யாரும் சசிகலாவை நேரடியாக சந்திக்கவில்லை.
இது அவருக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. சிறையில் இருந்து வந்த சசிகலாவை வரவேற்க வந்த கூட்டத்தைப் பார்த்து சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன. தமிழர்கள் எப்படியெல்லாம் மாறியுள்ளனர் என்று சிலர் ஆதங்கப்பட்டனர். இந்தநிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் நேற்று கூறும்போது, ‘தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு என்ற சென்னைவாசியின் நீண்ட நாள் ஏக்கம் தீர்ந்தது’ என்று கூறியுள்ளார். இது, சசிகலாவை மறைமுகமாக கிண்டல் அடிக்கும் பதிவு என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.