பெலகாவி: கொரோனா ஊரடங்கு காலத்தில் குறைந்த மின்சாரத்தில் இயங்கக்கூடிய மின்சார பைக்கை உருவாக்கி 10ம் வகுப்பு மாணவன் சாதனை படைத்துள்ளார். பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா நிப்பானே பகுதியை சேர்ந்தவர் பிரதமேஷ் சுதாரா. இவர் சிக்கோடியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கொரோனா ஊரடங்கின் போது பழைய பைக்கின் உதிரி பாகங்களை கொண்டு மின்சாரத்தில் இயங்கக்கூடிய வகையில் எலக்ட்ரிக் பைக்கை உருவாக்கியுள்ளார்.
ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 35 கி.மீட்டர் தூரம் வரை பயணிக்கும் இந்த எலக்ட்ரிக் பைக் மணிக்கு 40 கி.மீட்டர் வேகத்தில் செல்ல முடியும் என்று கூறும் பிரதமேஷ் இந்த பைக்கை உருவாக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் பெரும் உதவியாக இருந்ததாகவும், இந்த பைக்கை உருவாக்க தனக்கு ரூ.25 ஆயிரம் செலவானதாகவும் கூறுகிறார். பிரதமேஷ் தன் தந்தை எலக்ட்ரிஷியனாக பணியாற்றி வருவதால் பள்ளி விடுமுறை நாட்களில் தன் தந்தையுடன் சென்று எலக்ட்ரிக் பணி செய்து வந்துள்ளார். இதுவே தனக்கு எலக்ட்ரிக் பைக் உருவாக்க உந்துதலாக இருந்ததாக கூறுகிறார்.