ராணிப்பேட்டை: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ராணிப்பேட்டை தொகுதிக்குப்பட்ட பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது முத்துக்கடை பகுதியில் பேசிய அவர்; நாட்டிலேயே அமைதிப் பூங்காவாக திகழும் ஒரே மாநிலம் தமிழ்நாடு. தமிழகத்தில் கல்வி கற்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு; உயர்க்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. கல்வியில் புரட்சி செய்தது அதிமுக; சிறுபான்மை மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அரசு செய்து கொடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகள் வரும் போது, பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதிமுக ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது. தமிழக அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கையால் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது. தை பொங்கலை சிறப்பாக கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2,500 வழங்கினோம். முதியோருக்கு ஓய்வூதியம், அம்மா மருத்துவ காப்பீடு உள்ளிட்ட திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியது அதிமுக அரசு. முதலமைச்சர் உதவி மையம், குறை தீர்க்கும் மேலாண்மை திட்டம் மூலமாக பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணப்படும்.
பொதுமக்களிடம் பெற்ற 9 லட்சம் மனுக்களில் 5.25 லட்சம் மனுக்களுக்கு தமிழக அரசு தீர்வு கண்டுள்ளது. 1100 உதவி எண் மூலம் செல்போனில் குறைகளை பதிவிட்டு மனுக்களாக அனுப்பினால், அதிகாரிகள் உடனடி தீர்வு காண்பர். 7.5% உள் ஒதுக்கீடு மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் 435 பேரின் மருத்துவர் கனவு நினவாகியுள்ளது என கூறினார்.