×

கருவேப்பிலங்குறிச்சி அருகே மின்கம்பிகள் உரசி தீப்பிடித்தது 15 ஏக்கர் கரும்பு எரிந்து நாசம்:விவசாயிகள் கண்ணீர்

விருத்தாசலம் : கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மருங்கூர் கிராமத்தில் உள்ள படுவை ஆற்றுப்பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிர் செய்துள்ளனர். இந்த பகுதியில் நேற்று மின்கம்பிகள் உரசி தீப்பற்றி எரிந்தது. இதில் விவசாயிகள் பழமலை, அண்ணாதுரை, பரமசிவம், ராமலிங்கம், சுப்பிரமணியன், அறிவழகன், செல்வராசு, மணிகண்டன், பாண்டியன், சக்கரவர்த்தி உள்ளிட்டோருக்கு சொந்தமான 15 ஏக்கர் பரப்பளவு கரும்பு எரிந்து நாசமானது.

மின்சார துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், 10 மாதங்கள் கஷ்டப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் மேலாக செலவு செய்து அறுவடைக்கு தயாரான நேரத்தில் அனைத்து கரும்புகளும் எரிந்து நாசமாகி விட்டதாகவும், எரிந்து போன கரும்பை, சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் அடிமாட்டு விலைக்கு வாங்குவதாகவும், கரும்பை வெட்டுவதற்கு ஆட்கள் கிடைக்க வில்லை என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

மேலும் வேளாண் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் இதுவரை தீயில் எரிந்த கரும்பு பயிர்களை பார்வையிட வரவில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

Tags : Karuvappilankurichi , Virudhachalam: Cuddalore District Virudhachalam next to Karuveppilankurichi in Marungur village near Paduvai river
× RELATED கருவேப்பிலங்குறிச்சி அருகே கனமழையால்...