சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக வனத்துறை செயற்கைக் கோள் மூலம் வனப்பகுதிகளை் கணக்கெடுத்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் 2017 முதல் 2019 வரையிலான காலத்தில் அலையாத்தி காடுகளின் பரப்பளவு 4 சதுர கி.மீ அளவுக்கு குறைந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் தான் மோசமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் அலையாத்தி காடுகள் குறிப்பிடத்தக்க அளவில் அழிந்துவிட்டதாக தெரியவந்திருக்கிறது. முத்துப்பேட்டையில் 60 சத காடுகள் அழிந்துவிட்டன.
இந்தக் காடுகள் சீரமைக்கப்படாவிட்டால் கடல் சீற்றத்திற்கு ஆளாகக் கூடும். தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள அலையாத்திக் காடுகள் கடல் சீற்றத்தை தடுப்பது மட்டுமின்றி, பறவைகளின் வாழ்விடமாகவும் திகழ்கிறது. திட்டமிட்டு செயல்பட்டால் தமிழ்நாட்டில் அலையாத்திக் காடுகளின் பரப்பளவை நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு அதிகரிக்க செய்வது சாத்தியமான ஒன்று தான். கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு கருதி தமிழக கடலோர பகுதிகளில் அலையாத்திக் காடுகளின் பரப்பளவை அதிகரிக்க சிறப்புத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.