சாம்ராஜ்நகர்: காவிரி நதியின் குறுக்கே கட்டியுள்ள பழமையான பாலம் சேதமடைந்துள்ளதால் அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா கொத்தேகாலா செக்போஸ்ட் அருகில் கொள்ளேகால் - பெங்களூரு செல்ல காவிரி நதியின் குறுக்கே ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் மீது அதிக எடை கொண்ட வாகனங்கள் செல்லக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்திருந்தும் அதிக எடை கொண்ட வாகனங்கள் செல்வதால் பாலத்தின் தூண்கள் வலுவிழந்து பாலம் சேதமடைந்துள்ளன.
இந்த பழமையான பாலம் கடந்த 1993 மற்றும் 2014ம் ஆண்டுகளில் ரூ.5 கோடி செலவில் சீரமைக்கப்பட்டது. தற்போது இந்த பாலத்தின் 24 தூண்களும் சேதமடைந்து உடையும் நிலையில் உள்ளது. எனவே இந்த பாலத்தை சீரமைப்பதோடு சிசிடிவி கேமரா பொருத்தி அதிக எடை கொண்ட வாகனங்கள் செல்வதை தடுப்பதுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட உதவி கலெக்டர் கிரிஷ் திலீப் பதோலே கூறுகையில், சேதமடைந்த பாலத்தை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். கொள்ளேகால் - பெங்களூரு செல்ல காவிரி நதியின் குறுக்கே ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் பாலம் கட்டப்பட்டது.