மும்பை: பாலிவுட் நடிகை கங்கனா, சினிமா மற்றுமின்றி அரசியல் தொடர்பான டுவிட்டர் பதிவுகளை போட்டு அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். அதனால், அவரது டுவிட்டுகள் பெரும்பாலும் டிரோல் செய்யப்பட்டு, சமூக ஊடகங்களில் பெரும் விவாத பொருளாக மாறும். இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக சர்வதேச பிரபலங்கள் வெளியிட்ட டுவிட்டுகளுக்கு, கங்கனா எதிர்வினை பதிவுகளை போட்டார். அவரது பதிவு வெறுக்கத்தக்க வகையில் இருந்ததால், டுவிட்டர் நிறுவனம் அந்த பதிவை நீக்கியது.
இந்நிலையில், கங்கனாவின் டுவிட்டர் கணக்கை பின்தொடரும் ஒருவர், ‘இந்த கங்கனாவிடம் இருந்து நம்மை பாதுகாக்க யாராவது தடுப்பூசி கண்டுபிடிப்பாங்களா? என்று கிண்டலாக பதிவிட்டிருந்தார். ஆனால், இந்த பதிவுக்கு பலர் பதில் அளித்திருந்தாலும் கங்கனா தரப்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனால் பாலிவுட் பாடகி சோனா மோகபத்ரா அளித்த பதிவில், ‘நீங்கள் யார்? நான் ஐகான்; உங்களது கேள்விக்கு பதிலைக் கண்டுபிடித்துள்ளேன். கங்கனாவிடம் இருந்து பாதுகாக்க தடுப்பூசி வேண்டுமென்றால், அந்த தடுப்பூசியை கங்கனாவால் மட்டுமே உருவாக்க முடியும்.
ஏனென்றால், அவர்களுக்கு அவ்வளவு ஆற்றல் உள்ளது’ என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். பாடகி சோனா மோகபத்ராவுக்கும், கங்கனாவுக்கும் இடையில் சமூக ஊடகங்களில் எதிரெதிர் கருத்துகள் வெளியாவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே ரித்திக் ரோஷன் சர்ச்சையின் போது கங்கனாவுக்கு எதிராக சோனா மோகபத்ரா ஒரு பகிரங்கக் கடிதம் எழுதினார். அதில், பெண்ணியத்தை அவமதித்ததாக கங்கனா மீது அவர் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.