திருவனந்தபுரம்: சபரிமலையில் மாசி மாத பூஜைகளுக்கு தினமும் 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு தேவஸம்போர்டு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலுக்கு பிறகு சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மண்டல, மகர விளக்கு காலத்தில் பக்தர்கள் அனுதிக்கப்பட்டனர். முதலில் தினசரி 1,000 பக்தர்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2,000 பக்தர்களும் அனுதிக்கப்பட்டனர். அதன்பிறகு இந்த எண்ணிக்கை 5,000 ஆக உயர்த்தப்பட்டது. அதுபோல முதலில் ஆன்டிஜன் பரிசோதனையும், டிசம்பர் 30ம் தேதி முதல் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையும் கட்டாயமாக்கப்பட்டது.
இந்த நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 12ம் தேதி திறக்கப்படுகிறது. 13ம் தேதி முதல் 17 வரை 5 நாட்கள் மாத பூஜைகள் நடக்கின்றன. இந்த நாட்களில் தினமும் 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என கேரள அரசுக்கு திருவிதாங்கூர் தேவஸம்போர்டு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க சுகாதாரத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் தினமும் 5,000 பக்தர்கள் மட்டுமே அனுதிக்கப்படுவர் என தெரிகிறது. இது தொடர்பாக இன்று முடிவெடுக்கப்பட உள்ளது.