×

மத்திய அரசுடன் மோதல் எதிரொலி: இந்தியாவின் டுவிட்டர் இயக்குனர் மஹிமா கவுல் பதவி விலகல்.!!!

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசுடன் மோதல் ஏற்பட்ட விவகாரத்தில் இந்தியாவின் டுவிட்டர் நிறுவன இயக்குனர் தனது பதவியில் இருந்து விலகி உள்ளார்.  உலகிலேயே அமெரிக்கா, ஜப்பானுக்கு அடுத்தப்படியாக சமூக வலைதள நிறுவனங்களின் வர்த்தகம் அதிகமுள்ள நாடாக இந்தியா இருக்கிறது. அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள், திரைப் பிரபலங்கள், அரசு அதிகாரிகள் உட்பட  கோடிக்கணக்கானோர் சமூக வலைதளங்களில் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கான டுவிட்டரின் பொதுக்கொள்கை இயக்குநராக மஹிமா கவுல் என்பவர் பணியாற்றி வருகிறார்.  தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டரின் பொதுகொள்கை துணைத் தலைவர் மோனிக் மெக்கே கூறுகையில், ‘இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கான டுவிட்டரின் பொதுக் கொள்கை இயக்குநர் மஹிமா கவுல் அவரது பதவியை ராஜினாமா செய்ய  முடிவெடுத்துள்ளார். அதனை இந்தாண்டு தொடக்கத்திலேயே அவர் தெரிவித்தார். 5 வருடத்திற்கும் மேலாக இங்கு பணியாற்றிய மஹிமா கவுல் அவரது வாழ்க்கையின் முக்கியமான நபர்கள் மற்றும் சொந்தங்கள் மீது கவனம் செலுத்த  நினைக்கிறார். அவர் வருகிற மார்ச் இறுதி வரை பணியில் இருப்பார்’ என்றார்.

ஆனால், மஹிமா கவுல் பதவி விலகலுக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்த நிலையில், டுவிட்டரில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய  அரசுக்கும் எதிராகவும் ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் ஆகின. இதனையடுத்து மத்திய அரசின் உத்தரவின் பேரில் 250 டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. ஆனால் அந்த கணக்குகள் அடுத்த இரண்டு நாட்களில் பயன்பாட்டுக்கு வந்தது.  இதனையடுத்து டுவிட்டர் நிறுவனம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும், அதற்குரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் டுவிட்டர் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியது. மத்திய  அரசுக்கும் டுவிட்டர் நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக மஹிமா கவுல் பதவி விலகி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

1,178 கணக்கை முடக்கு!

விவசாயிகள் போராட்டம் என்ற போர்வையில் இந்தியாவில் கலவரத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்த சதிகள் நடக்கின்றன. குறிப்பாக வெளிநாட்டிலிருந்து தொடர்ந்து டுவிட்டரில் பதிவுகள் வெளியிடப்படுகிறது. இவை பல்வேறு  தரப்பிலும் செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் ஆதரவு மற்றும் காலிஸ்தான் இயக்கத்தில் இருந்து நூற்றுக்கணக்கான டுவிட்டுகள் பதிவு செய்யப்படுகின்றன. எனவே, இந்தியாவின் ஒற்றுமை மற்றும்  ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக செயல்பட்ட 1,178 டுவிட் கணக்குகளை முடக்க வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் டுவிட்டர் நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது.

Tags : Echo ,Mahima Kaul ,conflict ,Government ,India ,Central ,Twitter , Echo of the clash with the central government: India's Twitter director Mahima Kaul resigns. !!!
× RELATED வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை!:...