×

நண்பர்களுடன் குளித்தபோது குளத்தில் மூழ்கி சகோதரர்கள் பலி

ஆலந்தூர்: புழுதிவாக்கத்தில் உள்ள குளத்தில் நண்பர்களுடன் குளித்தபோது அண்ணன், தம்பி ஆகியோர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை ஆதம்பாக்கம் காந்திநகர் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் ராஜன். இவர் பெயிண்டர். இவரின் மகன்கள் வினோத்குமார் (14), விஷால் (12). இவர்கள் ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் முறையே 9 மற்றும் 7 வகுப்பு படித்துவந்தனர்.

இவர்கள் நேற்று நண்பர்களுடன் புழுதிவாக்கம் அன்னை தெரசா நகரில் உள்ள ஒரு குளத்தில் குளித்துள்ளனர். திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற விஷால், தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதனால் தனது தம்பியை மீட்க சென்ற வினோத்குமாரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். நண்பர்களால் அவர்களை காப்பாற்ற முடியாததால் கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து அவர்களை மீட்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மடிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். குளத்தில் இறங்கி வினோத்குமார், விஷால் ஆகியோரின் சடலங்களை மீட்டு வெளியே கொண்டுவந்தனர்.

பின்னர் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி புகாரின்படி, மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Tags : brothers ,pool ,friends , Alandur
× RELATED கன்னியாகுமரி அருகே ஆபாசமாக திட்டியதால் கீழே தள்ளி கொன்றோம்