×

தென்காசி அருகே வீட்டை உடைத்து ரூ.4 லட்சம் நகை கொள்ளை: குற்றாலம் இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைப்பு

தென்காசி: தென்காசியை அடுத்த மேலகரம், ஸ்டேட் பேங்க் காலனி 4வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (53). இவர் பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செங்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

மருத்துவ சிகிச்சைக்காக சந்திரசேகர் மனைவியுடன் நேற்று நெல்லை வந்துவிட்டு இரவு 11.30 மணி அளவில் வீட்டுக்கு திரும்பிய போது, அவரது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள 73 கிராம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை உடைத்து அதன் ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்துச் சென்றுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சந்திரசேகர் குற்றாலம் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்களும் அங்கு பதிந்திருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சந்திரசேகர் வீட்டுக்கு 5 வழியாக வரலாம் என்று கூறப்படுகிறது. இதில் ஒரு வழியில் மட்டும் சிசிடிவி காமிரா இல்லாமல் உள்ளது. அந்த வழியாக கொள்ளையர்கள் வந்துள்ளனர். அவர்கள் வந்த வழியில் ஒரு மைதானம் உள்ளது. அந்த மைதானத்தின் வெளியே 3 சிசிடிவி காமிராக்கள் உள்ளன. அந்தப் பதிவுகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

தலைமை ஆசிரியர் சந்திரசேகருக்கு நன்கு அறிமுகமான நபர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரது வீட்டில் இரவு 8.45 மணி வரை ஆட்கள் இருந்துள்ளனர். இரவு 11.30 மணிக்கு தலைமை ஆசிரியர் வந்து விட்டார். இடைப்பட்ட 3 மணி நேரத்தில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால் அவரது வீட்டை நன்கு நோட்டமிட்ட நபர்களை இதில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் சிசிடிவி காமிரா ஹார்ட் டிஸ்க்கை கொள்ளையர்கள் உடைத்து சென்றுள்ளதால், கொள்ளையர்களில் ஒருவர் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தெரிந்தவராக இருக்கலாம் என போலீசார் யூகிக்கின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் இந்த வழக்கில் துப்பு துலங்கி விடும் என்று கூறப்படுகிறது.

டாக்டர் வீட்டில் கொள்ளை முயற்சி

தலைமை ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் குற்றாலம் மின் நகரில் உள்ள ஒரு டாக்டர் வீட்டையும் உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அங்கு நகையோ, பணமோ இல்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது, தலைமை ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்தவர்களா? என்று அங்குள்ள சிசிடிவி காமிரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : jewelery ,house ,Tenkasi ,special forces ,Courtallam Inspector , Tenkasi
× RELATED தென்காசி மாவட்டம் மைப்பாறை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து