சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவு எதுவும் இல்லை. அதனை அடுத்து இன்று, நாளை ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வட கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகக்கத்தில் வீசக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.