மதுரை: சட்டவிரோதமாக கடன் வழங்கும் செயலிகளுக்கு தடை கோரிய வழக்கு, மார்ச் 1-ம் தேதிக்கு உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்துள்ளது. நவீன காலத்தில் செல்போன் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. செல்போன் மூலமாக கடன் பெறுவதற்காக பல புதிய செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த செயலிகள் ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல், புதிது புதிதாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த செயலி மூலம் கடன் பெறுபவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு செல்கின்றனர். இவர்கள் மீது பல்வேறு புகார்கள் இதுவரை எழுந்துள்ளன. இந்த கடன் தொல்லையால் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதனால் சட்ட விரோதமாக செயல்படும் கடன் வழங்கும் செயலிகளை தடை செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சில மாதங்களுக்கு முன்னதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் ரிசர்வ் வங்கி ஆளுநர், கூகுள் நிறுவனம், மத்திய நிதித்துறை செயலாளர் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
தற்போது ஒத்திவைக்கப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோ அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியதால் நீதிபதிகள் வழக்கு விசாரணையை மார்ச் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.