சென்னை: இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான மேலும் சில சொத்துகள் தமிழக அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள இருவரது சொத்துக்களை அரசு பறிமுதல் செய்துள்ளது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இதனை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் செய்துள்ளார்.
அதாவது சொத்துகுவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின் அடிப்படையில், நேற்று சென்னை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட இளவரசி,சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 6 சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது. இந்த சொத்தக்கள் அனைத்தும் தமிழக அரசின் சொத்துக்கள் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. மேலும் அந்த சொத்துக்களில் இருந்து பெறப்படும் வருவாய் தமிழ்நாடு அரசுக்கே சொந்தம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சென்னை டிடிகே சாலையில் ஸ்ரீராம் நகரில் உள்ள ஒரு சொத்து, வாலஸ் தோட்டத்தில் உள்ள 5 சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது மேலும் சில சொத்துக்களை அரசு கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளவரசி,சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள சொத்துக்கள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.