திருவாரூர்: பிரதமரை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்ற சர்வாதிகார ஆட்சி மத்தியில் நடப்பதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். திருவாரூரில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசும் பொது இந்த குற்றசாட்டை கூறியுள்ளார். நாட்டில் விவசாயிகள் மட்டுமின்றி யார் போராட்டம் நடத்தினாலும் அதனை பற்றி கவலைப்படக்கூடாது என்ற அலட்சியமே பிரதமர் நரேந்திர மோடி அரசின் கொள்கையாக உள்ளதாக நாராயணசாமி புகார் தெரிவித்திருக்கிறார். மக்கள் விரோத திட்டங்களையே மோடி அரசு செயல்படுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.
மின்சாரம், நிலக்கரி சுரங்கம், காப்பீட்டுத்துறை, பாரத் பெட்ரோலியம், வங்கிகள், பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வார்த்துவிட்டு அரசாங்கத்தை எப்படி நடத்த முடியும் என்றும் நாராயணசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார். புதுச்சேரியில் மோடியும், பாஜக-வும் காலூன்றினால் மதவாத, பிரிவினைவாத சக்திகள் தலைதூக்கிவிடும் என்று நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்ற காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியின் கொள்கையே நாட்டுக்கு ஏற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.