வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே பைப்லைன் உடைந்து பல மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.வாணியம்பாடி அடுத்த பெரியபேட்டில் பிரசித்தி பெற்ற அழகு பெருமாள் கோயில் மற்றும் தர்கா உள்ளது.
அதன் அருகில் சாலையின் நடுவில் குடிநீர் பைப் லைன் உடைந்து பல மாதங்களாக தண்ணீர் வெளியேறி கொண்டிருக்கிறது. இதனால் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. மேலும் இவ்வழியாக பல கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்துகள் ஏற்படுவதாக பலமுறை நகராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே விரைவில் போராட்டம் செய்யப்போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.