×

அதிமுக மிகப்பெரிய இயக்கம்: ஈ, கொசுவுக்கு எல்லாம் நாங்கள் பயப்படுபவர்கள் கிடையாது: சசிகலா தமிழகம் வருகை குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: அதிமுக மிகப்பெரிய இயக்கம். கொசு, ஈக்களுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் கிடையாது என்று சசிகலா தமிழகம் வருகை குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி: சசிகலாவும் தினகரனும் அதிமுகவுக்கும், அதிமுக அரசுக்கும் ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு ஒரு சதியை இன்றைக்கு அரங்கேற்றுகிறார்கள். அதை தடுக்கும் வகையில் புகார் கொடுக்கப்பட்டது. புகார் கொடுக்க ஒரு குழுவாக டி.ஜி.பி.அலுவலகம் போனோம். பொதுவாக சட்ட ஒழுங்கு  பிரச்னை என்றால், சட்ட அமைச்சர் பேட்டி கொடுப்பது இயல்பு.

அவர் இல்லை என்றால் நான் பேட்டி கொடுக்கலாம். அதனால் தான் அவரை  பேட்டி கொடுக்க சொன்னேன். அவர் பெருந்தன்மையாக நீங்கள் சொல்லுங்க என்றார்.  இது தான் நடந்தது.  ஒருத்தர் சொல்லி விட்ட பின்னர் நான் போய் பேச முடியாது. அதிமுக கட்டுப்பாடு உள்ள கட்சி. சசிகலா, தினகரன் தேவையில்லை என்பது நாங்கள் எடுத்த நிலை. அதிமுகவை எத்தனை பேர் ஒன்று சேர்ந்தாலும் ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது. சட்டத்தை நாங்கள் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது. சட்டத்தை மதிக்கிறவர்கள் நாங்கள். சட்டப்படி போலீசார் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால், போலீசாரிடம் புகார் கொடுத்தோம் என்றார். பின்னர் சசிகலா அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தால் உஙகள் எதிர்வினை எவ்வாறாக இருக்கும் என்ற கேள்விக்கு, ‘‘கொசு, ஈக்களுக்கு எல்லாம் பயப்படும் இயக்கம் இது இல்லை’’ என்றார்.

Tags : AIADMK ,Jayakumar ,mosquitoes ,visit ,Sasikala Tamil Nadu , AIADMK, Sasikala, Minister Jayakumar, Interview
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...