சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை: கல்வி, உத்தியோக நியமனங்களில் காலங்காலமாய் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்த பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையோர் இட ஒதுக்கீடு காரணமாக பெற்று வரும் சமூகநீதி நாளும் பல்வேறு துறைகளில் அதிரடியாக சிதைக்கப்பட்டு வருகிறது. ஓர் அறிவிப்பு மத்திய அரசு சார்பில் வந்துள்ளது மத்திய அரசின் முக்கிய இலாக்காக்களை நிர்வகிக்கும் கூட்டுச் செயலாளர்கள் என்ற பொறுப்பிற்கு முப்பது பேரை, தனியார் துறையிலிருந்தும், வெளியிலிருந்தும் மத்திய அரசே தேர்வு செய்து நேரடியாக நியமனம் செய்வார்களாம்.
அரசின் வழக்கமான முறையை புறந்தள்ளி விட்டு திடீரென்று முப்பது பேரை தனியார் துறைகளிலிருந்து மத்திய அரசே தேர்வு செய்து நேரடியாக எடுத்த எடுப்பில் கூட்டுச் செயலாளராக நியமித்து விடுவது, நடுவில் ஊடுருவுவது என்பது அரசமைப்புச் சட்டப்படியும், நியாயப்படியும் ஏற்கத்தக்கதல்ல. எனவே, இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.