×

தமிழக அரசின் அலட்சியத்தால் கனவாகி வரும் எய்ம்ஸ் மருத்துவமனை: மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்

மாநில அரசை பொறுத்தவரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மிகவும் அலட்சியத்தோடு நடந்து வருகிறார்கள். குறிப்பாக, எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அடிப்படை பணி என்பது அதற்கான நிலத்தை கையகப்படுத்தி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும். அந்த நிலம் தமிழக அரசுக்கு சொந்தமான நிலம். அந்த நிலத்தை மடைமாற்றி தர வேண்டும். இந்த வேலையை செய்ய மாநில அரசு 2 ஆண்டுகள் எடுத்து கொண்டது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தொடர்ச்சியாக இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளேன். அதில், தமிழக அரசு உடனடியாக மத்திய அரசிடம் நிலத்தை ஒப்படையுங்கள் என வலியுறுத்தினேன். ஆனால், மாநில அரசு தன் கையில் நிலம் கொடுப்பதற்கு இப்படி காலம் தாழ்த்தியுள்ளது. இந்த மருத்துவமனையால் நேரடியாக லாபம் எதுவும் இல்லை என்று தமிழக அரசு நினைக்கிறது. அதனால், தான் 2020 டிசம்பரில் தான் நிலத்தை மாற்றி கொடுத்துள்ளனர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக எந்த ஒரு அக்கறையான நடவடிக்கை எடுக்க மாநில அரசு மறுக்கிறது. குறிப்பாக, 2023ல் எய்ம்ஸ் மருத்துவமனை நடைமுறைக்கு வர வேண்டும். அதே ஆண்டு நடைமுறைக்கு வர வேண்டிய ஆந்திரா, தெலங்கானா, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆகிய  3 மாநிலங்கள் மற்றும் தமிழகம் உட்பட 4 இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நடைமுறைக்கு வர வேண்டும். ஆனால், தமிழகத்தை தவிர்த்து மற்ற 3 இடங்களில் மருத்துவ கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடந்து வருகிறது.

அந்த 3 இடங்களில் சம்பந்தப்பட்ட மாநில அரசு அடிப்படை உட்கட்டமைப்பான தற்காலிக மருத்துவமனை 300 படுக்கைகள் கொண்டது. மாணவர்கள் தங்குவதற்கான கட்டிடம் தற்காலிகமாக கொடுத்துள்ளது. அங்கு வந்து அடிப்படை கட்டமைப்புகள் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்காலிக மருத்துவமனை, மாணவர்கள் தங்குவதற்கான கட்டிடம் எதுவும் கொடுக்கவில்லை. அப்படி ஒரு முயற்சியே தமிழக அரசு எடுக்கவில்லை. இதில், உச்சபட்சமான பிரச்னை என்றால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தனி அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். அப்படி ஒரு தனி அலுவலர் நியமித்தால் தான் எய்ம்ஸ் சார்ந்த அனைத்து விஷயங்களையும் தொடர்ந்து பேசி ஒருங்கிணைந்து அந்த வேலையை எளிதில் செய்ய முடியும். எனவே, ஒரு தனி அலுவலரை நியமியுங்கள் என்று தொடர்ச்சியாக கூறி வருகிறோம். இப்போது வரை ஒரு தனி அலுவலர் நியமிக்கப்படவில்லை. எய்ம்ஸ்க்கான நிலத்தை கொடுக்க 2 வருடம், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மருத்துவமனை, கட்டிடம், தனி அலுவலர் நியமிக்கவில்லை. இதை விட உச்சமாக அடிக்கல் நாட்டி 2 வருடம் ஆகிறது. இப்போது வரை ஒரு வேலை கூட செய்யவில்லை. ஆனால், 2 வாரத்திற்கு முன்னால் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்துக்கு வரப்போகிற முதல் எய்ம்ஸ்.

இது ஒரு மிகப்பெரிய கனவு. குறிப்பாக, தென்தமிழ்நாட்டில் வாழும் மக்களின் மிகப்பெரிய கனவு. அது பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் மாநில அரசு நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசை ெபாறுத்தவரை தொடர்ச்சியான மாற்றான்தாய் மனப்பான்மையின் நீட்சியாக நான் பார்க்கிறேன். குறிப்பாக, எய்ம்ஸ் மருத்துவமனை 2019 பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது. 2 ஆண்டுகள் முடிந்து விட்டன. தற்போது வரை புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படவில்லை. குறிப்பாக, மதுரை எய்ம்ஸ் மட்டும் தான் கடன் வாங்கி கட்டுகிற மருத்துவமனை. மற்ற மாநிலத்தில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை முழுக்க, முழுக்க மத்திய அரசின் நிதியின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. ஜெய்க்கா எனப்பதும் ஜப்பான் பன்னாட்டு முகமை நிதியின் மூலம் கட்டப்படுகிறது. முதலில் கடன் வாங்க வேண்டுமென்றால் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். ஆனால், புரிந்துணர்வு ஒப்பந்ததில் கடந்த ஜூன் மாதத்திற்குள் கையெழுத்திடுவோம் என்று கூறினார்கள். பிறகு, டிசம்பரில் கையெழுத்து போடுவோம் என்றனர். நான் இப்போது செயலாளரை பார்த்து மீண்டும் கேட்டதற்கு வரும் மார்ச் மாதத்துக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம் என்று கூறியுள்ளனர். இப்படி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு கூட இவ்வளவு பெரிய காலதாமதம் தொடர்ச்சியாக உள்ளது.  மத்திய அரசு கையில் இருந்து தரவில்லை. கடன் வாங்கி தான் தரப்போகிறது. அப்படியிருந்தும் தொடர்ச்சியான அலட்சியப்போக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது. 3 பட்ஜெட் முடிந்து விட்டது. ஆனால், மத்திய அரசு அலட்சியம் காட்டி வருகிறது. மத்திய அரசின் பொறுப்பின்மை, மாநில அரசு கவனமின்மை போன்ற காரணம் தான் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வராமல் இருப்பதற்கு காரணம்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இதில் அக்கறையில்லை. அவர் வேறு அரசியல் லாபத்துக்காக தான் பிரதமர் மோடியை போய் சந்தித்தார். ஆனால், தமிழகத்தின் நலனுக்காகவோ, தமிழக மக்களுக்கு வர வேண்டிய திட்டங்களை கேட்டு பெறுவதோ, அது அறிவிக்கப்பட்டு தாமதம் ஆகியிருப்பதை பற்றி சிறு அழுத்தம் கூட தரவில்லை. ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1,200 கோடியில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்தது. இப்போது ரூ.2000 கோடி ஆகும் என்று கூறுகின்றனர். இப்போது ரூ.800 கோடி அதிகரித்துள்ளது. மீண்டும் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெறாமல் ரூ.2 ஆயிரம் கோடியை அறிவிக்க முடியாது. அப்போது மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வேண்டியது சாதாரண விஷயம் அல்ல. மாநில அரசு முனைப்பு காட்டினால் தான் விரைவில் நடக்கும். நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் தொடர்ச்சியாக இந்த பிரச்னையை எழுப்ப வேண்டும். நாங்கள் ஒவ்வொரு வாரமும் மத்திய அமைச்சர், செயலாளரை சந்திக்கிறோம். மாநில அரசும், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பேச வேண்டும். அவர்கள் பேசுவதில்லை. டெல்லி செல்லும் முதல்வர் எடப்பாடி கூட பேசவில்லை. இதன் மீது அக்கறையின்மை தான் காரணம். அவர்களுக்கு தனி லாபம் கிடைக்காது. அதனால், கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வரும் பட்சத்தில் மருத்துவம் சார்ந்த, சுகாதாரம் சார்ந்த மிகப்பெரிய வளர்ச்சி பெற்ற பகுதியாக தென் தமிழகம் மாறும். நமக்கு ‘மெடிக்கல் ஹப்’பாக இருப்பது சென்னை, கோவை தான். மத்திய மருத்துவ ஆராய்ச்சி கல்வி நிறுவனம் வரும் போது, அதையொட்டி சுகாதாரம், போக்குவரத்து சார்ந்து மதுரை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து வருகின்றனர். அது போன்று எய்ம்ஸ் மருத்துவமனை வந்தால் கூட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து மதுரை வருவார்கள். இப்போதைக்கு மத்திய அரசு இப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அமைச்சரவை நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.


Tags : AIIMS Hospital ,S. Venkatesh ,Madurai ,government ,Tamil Nadu , Government of Tamil Nadu, AIIMS Hospital, Madurai
× RELATED மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான...