×

காங். தலைவராக ராகுலை தேர்வு செய்யணும்..! டெல்லியை தொடர்ந்து சட்டீஸ்கரிலும் தீர்மானம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட வேண்டும் என சட்டீஸ்கர் காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கடந்த 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரும் தோல்வி சந்தித்ததால், அதற்கு பொறுப்பேற்று பல மாநிலங்களிலும் காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்தனர். இதன் எதிரொலியாக தாமாக முன்வந்து தேசிய தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்தார். அதனால், சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்றார். ஆனால், இவரது உடல்நிலை காரணமாக அவரால் கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியவில்லை.

இதனையடுத்து, காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு நடத்தப்பட வேண்டும் என அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் சோனியாவுக்கு எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே இரண்டு முறை காங்கிரஸ் காரிய கமிட்டி கூடிய போதும் தலைவர் தேர்வு, 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என டெல்லி காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. தற்போது இருக்கும் அரசியல் சூழலில் ராகுல்காந்தியை போன்ற ஆற்றல் வாய்ந்த தலைவர் தான் தேவை என டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் குமார் பேசியிருந்தார்.

இந்நிலையில் சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டியிலும் ராகுல் காந்தி மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் முன்மொழிந்த இத்தீர்மானத்தை மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பி.எல்.பூனியா மற்றும் அம்மாநில காங் தலைவர் மோகன் மார்கம் ஆகியோர் வழிமொழிந்தனர். வரும் ஜூன் மாதத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு நடத்தப்பட இருக்கும் சூழலில் டெல்லி, சட்டீஸ்கர் என இரண்டு மாநிலங்களில் அடுத்தடுத்து ராகுலுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Rahul ,Delhi ,Chhattisgarh , Cong. Wants to elect Rahul as leader ..! Resolution in Chhattisgarh following Delhi
× RELATED மோடியின் பொய்களால் வரலாறுகள் மாறி...