×

தேவேந்திர குல வேளாளர் தலைவரை கொல்ல முயற்சி காவல்நிலையம் மீது சரமாரி குண்டு வீச்சு

நெல்லை: நெல்லை தச்சநல்லூர் சத்திரம்புதுக்குளத்தைச் சேர்ந்தவர் கண்ணபிரான் (50). தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்க நிறுவனத் தலைவராக உள்ளார். இவர், இன்று காலை 11.30 மணியளவில் அருகில் உள்ள தச்சநல்லூர் காவல்நிலையத்தில் ஒரு வழக்கு தொடர்பாக கையெழுத்து போடுவதற்காக வீட்டில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்டு நடந்து வந்துள்ளார். காவல் நிலையம் அருகில் வந்த போது அவரை பின்தொடர்ந்து ெஹல்மெட் அணிந்து 4 பைக்குகளில் 10 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.

திடீரென்று அவர்கள் கண்ணபிரான் மீது அடுத்தடுத்து 3 நாட்டு வெடிகுண்டுகளை கண்ணிமைக்கும் நேரத்தில் வீசினர். சுதாரித்துக் கொண்ட கண்ணபிரான், காவல்நிலையத்திற்குள் ஓடி உயிர் தப்பினார். மர்மநபர்கள் வீசியதில் முதல் குண்டு காவல்நிலையம் முன்புள்ள பாறையில் பட்டு வெடித்துச் சிதறியது. அடுத்த குண்டு காவல்நிலையம் முன்புள்ள கேட் மீதும், மூன்றாவது குண்டு காவல்நிலையம் முன்புள்ள சாலையிலும் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ளவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போன்று காணப்பட்டது. மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டுகள் வீசியதில் கண்ணபிரானின் ஆதரவாளர் கிங்ஸ்டன் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து காவல்நிலையத்தில் பணியில் இருந்த போலீசார் உடனடியாக வெளியே வந்து பார்த்தனர். அப்போது மர்மநபர்கள் 4 பைக்குகளில் தப்பிச் செல்வது தெரிய வந்தது. காயமடைந்த கிங்ஸ்டன், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.வெடிகுண்டு பிரிவு இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் நிபுணர்கள் வந்து வெடித்துச் சிதறிய வெடிகுண்டு துகள்களை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். மேலும் காவல்நிலையத்தில் இருந்த கண்ணபிரானை போலீசார் பாதுகாப்பாக அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. மேலும் அவரது வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். வெடிகுண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக காவல்நிலையம் முன்புள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குபதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தையொட்டி அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Devendra Kula Vellalar ,police station , ‘Devendra Kula Vellalar, leader, kill, bomb
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...