×

தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வருகை: சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க ஓசூரில் குவியும் அமமுகவினர்

ஓசூர்: நாளை சென்னை வரும் சசிகலாவுக்கு, மாநில எல்லையில் பிரமாண்ட வரவேற்பளிக்க அமமுக சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக, அமமுக நிர்வாகிகள் 2 நாள் முன்னதாகவே ஓசூரில் வந்து தங்கியுள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா, கர்நாடக மாநிலம் தேவனஹள்ளியில் உள்ள விடுதியில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். அவர் நாளை (8ம் தேதி) சென்னைக்கு வருகிறார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தமிழகம் முழுவதில் இருந்து ஓசூர் வந்துள்ள அமமுகவினர், மாநில எல்லையான சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சசிகலாவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

கர்நாடகாவில் இருந்து தமிழகத்தின் நுழைவாயிலான ஓசூர் நகரப்பகுதியில், 3 இடங்களில் வரவேற்பு அளிக்க, முன்னாள் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தலைமையில், அமமுக நிர்வாகிகள் வரவேற்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். குறிப்பாக, சசிகலாவை வரவேற்க தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் ஓசூரில் குவிந்துள்ளனர். இதற்காக அனைத்து விடுதிகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகாசி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வந்துள்ளனர். அதில் சில முன்னாள் அமைச்சர்களும் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள், மாநில எல்லையான ஓசூரில் சசிகலாவை வரவேற்க பெரிய அளவிலான பேனர்களை கட்டி வருகின்றனர். ஜூஜூவாடி, ஓசூர், சூளகிரி, சின்னாறு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து காவல்துறை உயர் அதிகாரிகளும், ஓசூரில் முகாமிட்டு ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து அமமுக மாவட்ட செயலாளர் மாரேகவுடு கூறுகையில், ‘எனது தலைமையில் 100 கார்களில் தொண்டர்கள் செல்கின்றனர். ஓசூர் மாநகர பகுதியில் 3 இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். முதலில் மாநில எல்லையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கிறோம்,’ என்றார்.

Tags : visitors ,Hosur ,Sasikala , Plenty of visitors from the Thenmavattam: Kuviyum amukavinar to welcome Sasikala in Hosur
× RELATED சிறுமியை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்கள்