×

ஊரடங்கு காலத்தில் எக்கச்சக்கமாக எகிறிய கருக்கலைப்பு: இந்திய அளவில் தமிழகம் 2வது இடம்..! குடும்பக் கட்டுப்பாடு, அறுவை சிகிச்சையில் முதலிடம்

சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகளவு கருக்கலைப்பு நடந்த மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. மேலும், குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் கருத்தடை சிகிச்சையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க 2020ம் ஆண்டு மார்ச் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் கருத்தடை சாதனம் மற்றும் கருத்தடை மாத்திரைகள் அதிகம் விற்பனையாகி உள்ளதாக தற்போது ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. குறிப்பாக, ‘காண்டம்’ விற்பனை அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக ஆன்லைன் பொருட்களை டெலிவரி செய்யும் இணையதளம் ஒன்று நடத்திய ஆய்வில் பெரு நகரங்களில் ‘காண்டம்’ விற்பனை வழக்கத்தைக் காட்டிலும் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையில் அது 5 மடங்காக அதிகரித்துள்ளது. இரவை விட பகலில்தான் அதிகளவு விற்பனையாகியுள்ளது. இதேபோல், கருத்தரிப்பை கண்டுபிடிக்கும் கருவிகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் அதிக கருத்தடை சிகிச்சை நடந்த மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இதன்படி இந்த காலக்கட்டத்தில் நாடு முழுவதும் 7,86,309 பெண்கள் கருத்தடை சிகிச்சை செய்து கொண்டுள்ளனர்.  தமிழகத்தில் அதிகபட்சமாக 1,06,325 பெண்கள் கருத்தடை சிகிச்சை செய்துள்ளனர்.

இதை தவிர்த்து அதிக கருக்கலைப்புகள் (Terminated Pregnancy) நடந்த மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. இதன்படி நாடு முழுவதும் 2,85,867  கருக்கலைப்புகள் நடந்துள்ளது. தமிழகத்தில்  மட்டும் 42,758 கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளது. இதே காலக்கட்டத்தில்  நாடு முழுவதும் 1,53,87,123 கர்ப்பிணிகள் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 6,45,552 கர்ப்பிணிகள் பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் 1,05,01,319 பிறப்புகள் பதிவாகி உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 5,09,695 பிறப்புகள் பதிவாகி உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை பளு, மன அழுத்தம் உள்ளிட்டவை தம்பதிகளிடையே குறைந்துள்ளதாகவும், குழந்தையின்மைக்காக மருத்துவமனைக்கு செல்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்ததாகவும் மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : curfew ,India ,Tamil Nadu , Abortion abounds during curfew: Tamil Nadu ranks 2nd in India ..! Family planning, first in surgery
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...