தமிழகம் கடந்த காலங்களில் பல பேரிடர்களை சந்தித்தன. அதற்கெல்லாம் மாநில அரசு நிவாரணத்தொகை கேட்டால், சிறிய அளவிலான தொகையை கொடுத்துவிட்டு நிதி கொடுத்து விட்டோம் என மத்திய அரசு கணக்கு காட்டி வருகிறது. அதுமட்டுமில்லாமல் நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்சனை, எட்டு வழி சாலை, மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு இப்படி தமிழக அரசு எதையெல்லாம் வேண்டாம் என்று சொல்கிறதோ அதை எல்லாம் தமிழக அரசை அடி பணிய வைத்து தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்றி வருகின்றனர். பெரும்பாலான மக்கள் இதனை எதிர்த்தாலும் மாநிலத்தில் இருக்கக்கூடிய அரசு இதற்கு எந்த ஒரு பெரிய அளவிலான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. காரணம் இவர்களின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அதற்கு பயந்து அடிமையாகி தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகின்றனர்.
இந்த போக்கு எப்போது மாறும் என தமிழக மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். மத்திய பாஜ அரசால் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்று தெரிந்தும், தற்போது தமிழக அரசு மூலமாக அதனை செயல்படுத்தி வருகிறது. இதற்கெல்லாம் வருகின்ற தேர்தல் முற்றுப்புள்ளியாக இருக்கும் என பொதுமக்கள் கருதுகின்றனர். சுயமாக முடிவு எடுக்கக் கூடிய ஒரு அரசு அமைய வேண்டும் என்பதே அனைத்து வாக்காளர்களின் எண்ணமாக உள்ளது. மாநில அரசு சுயமாக சிந்திக்கிறதோ, இல்லையோ மக்கள் தற்போது சுயமாக சிந்திக்க தொடங்கி விட்டனர். எனவே தமிழகத்தில் பாஜ காலூன்ற முடியாது என்பதை வருகின்ற தேர்தலில் மாநில அரசுக்கு சுட்டி காட்டுவதன் மூலம் மத்திய அரசு இதனை திட்டவட்டமாக புரிந்துகொள்ளும் என்று நம்பலாம்.