மதுரை: ஊராட்சி ஒன்றிய நிதியை வேறு திட்ட பணிகளுக்கு பயன்படுத்தும் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியத் தலைவர் அமிர்தவள்ளி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஜனநாயக முறைப்படி நான், ஒன்றிய தலைவராக செயல்பட கலெக்டர், பிடிஓ உள்ளிட்டோர் அனுமதிப்பதில்லை. பெரும் இடையூறு செய்கின்றனர். ஒரு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு திட்டத்திற்கு பயன்படுத்துகின்றனர். இவ்வாறு நிதியை மாற்ற அதிகாரம் இல்லை. அதிகாரிகளின் இந்த நடவடிக்கை ஊராட்சி ஒன்றிய பணிகளை முடக்கும் வகையில் உள்ளது. எனவே, நிதியை வேறு பணிக்கு பயன்படுத்தும் இணை இயக்குநரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து, நிதியை மாற்றும் இணை இயக்குநரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, மனுவிற்கு கலெக்டர், ஊரக வளர்ச்சி இணை இயக்குநர், மணப்பாறை பிடிஓ ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணயை பிப். 12க்கு தள்ளிவைத்தார்.