சென்னை: சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிடிநநாடு காவல்துறையினர், பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மாநிலத்தில் வகுப்பு, சமய, அரசியல் ரீதியான பிரச்சினைகள் ஏதுமின்றி பொது அமைதியை நிலைநாட்டி சட்டம்-ஒழுங்கை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், சில குறிப்பிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அரசியல் நோக்கங்களுக்காக பிற அமைப்பினரைப் போல் தங்களைப் பாவித்துக் கொண்டு பெருந்திரளாகக் கூடி சட்டத்தை கையிலெடுத்து போக்குவரத்தையும், பொது அமைதியையும் பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதுபோன்ற செயல்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதுடன், மாநிலம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழ இடையூறாக இருக்கும் என்பதால் யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாமென தமிழக காவல் துறை கேட்டுக் கொள்கிறது. இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.