×

பொள்ளாச்சி - போத்தனூர் இடையே ரயில் பாதை மின்மயமாக்கும் பணி தீவிரம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வழியாக திண்டுக்கல் - போத்தனூர் ரயில்பாதை திட்டத்தில், கடந்த 2009ம் ஆண்டு அகல ரயில் பாதைக்கான பணி துவங்கப்பட்டது. இப்பணி 8ஆண்டுகளில்  நிறைவுபெற்றது. இதையடுத்து கடந்த 2015ம் ஆண்டு முதல் மதுரை, திருச்செந்தூர், சென்னை, பாலக்காடு, கோவை என பல்வேறு பகுதிகளுக்கு அடுத்தடுத்து ரயில் சேவை இருந்தது.   இதற்கிடையே திண்டுக்கல், போத்தனூர் மற்றும் பாலக்காடு வரை பொள்ளாச்சி வழியாக செல்லும் அகல ரயில்பாதையை மின்மயமாக்கி ரயில் சேவையை மேலும் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டும் என, ரயில் பயணிகள் நல சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, திண்டுக்கல்-போத்தனூர் மற்றும் பாலக்காடு வரையிலான அகல ரயில்பாதையை மின்மயமாக்கும் பணிக்காக சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கப்பட்டது.

 இதைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, கிணத்துக்கடவு வழியாக கோவை அருகே போத்தனூர் வரை ரயில்பாதை மின்மயமாக்குவது தொடர்பான அளவீடு பணி நடந்தது. சில வாரங்களில் பொள்ளாச்சியிலிருந்து - போத்தனூர் வரை சுமார் 40 கி.மீட்டர் தூரத்திற்கு மின்கம்பங்கள் அமைப்பதற்காக, ஆங்காங்கே கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்தது. இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பிருந்து, மின் மயமாக்குவதற்கான கம்பங்கள் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. மேலும், ஆங்காங்கே ஜங்சன் பாக்ஸ் அமைக்கும் பணியும் நடந்தது. இப்பணி தற்போது சுமார் 40சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த மின்கம்பங்கள் சத்தீஷ்கர் மாநிலம் ராயப்பூரில் இருந்து கொண்டு வரவேண்டும் என்பதால், தற்போது போத்தனூரிலிருந்து கிணத்துக்கடவு அருகே மட்டுமே மின் கம்பம் நடும் பணி நிறைவு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், மீதமுள்ள பணிகளை விரைந்து நிறைவு செய்ய, மின்மயமாக்கல் பணியை துரிதமாக்க ரயில்வே அதிகாரிகள் தீவிரம் காட்டியுள்ளனர்.  தற்போது, தளர்வுடன் கொரோனா ஊரடங்கு தொடர்வதால், பொள்ளாச்சியிலிருந்து திருச்செந்தூர், கோவை, பாலக்காடுக்கு செல்லும் பயணிகள் ரயில் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு முற்றிலும் நிறைவடைந்தவுடன், பொள்ளாச்சி வழியாக பல்வேறு இடங்களுக்கு ரயில்வே சேவை துவங்கப்படுகிறது. பொள்ளாச்சி வழியாக வெளியூர்களுக்கு கூடுதல் ரயில் சேவை இருக்கும் என, ரயில் பயணிகள் சங்கத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : Pollachi - Bodhanur , Pollachi, Bothanur, Railway, Electrification
× RELATED திருப்பூரில் பெட்ரோல் பங்கில்...