பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி பகுதியில் மழை பெய்தும் காய்ந்த தென்னை மரங்களை காப்பாற்ற முடியாமல், விவசாயிகள் வெட்டி அழித்து வருகின்றனர். பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, மருதாநதி அணை கோம்பை, சித்தயன்கோட்டை, தேவரப்பன்பட்டி, எம்.வாடிப்பட்டி, சுந்தரராஜபுரம், ஒட்டுப்பட்டி, சேவுகம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரம் தென்னை விவசாயத்தை நம்பியே உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இப்பகுதியில் சரியாக பருவமழை பெய்யாமல் பொய்த்து வந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர்மழை காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் அதிகளவில் உள்ளது. ஆழ்குழாய், கிணறுகளில் தண்ணீர் ஊற்று அதிகரித்துள்ளது.
மேலும் மருதாநதி, குடகனாறு உள்ளிட்ட ஆறுகளிலும் தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளது. எனினும் கடந்த பல ஆண்டுகளாக நிலவி வந்த வறட்சியில் காய்ந்த தென்னை மரங்களை தற்போது பெய்த மழையால் காப்பாற்ற முடியவில்லை. இதன் காரணமாக இப்பகுதி விவசாயிகள் காய்ந்து வரும் தென்னை மரங்களை வெட்டி அழித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த தென்னை விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த 5 வருடங்களுக்கு பின்பு தற்போது தான் இப்பகுதியில் எதிர்பார்த்த அளவு மழை பெய்துள்ளது. இருந்த போதும் வறட்சியால் காய்ந்த தென்னை மரங்களை காப்பாற்ற முடியவில்லை. மேலும் மாற்று விவசாயம் செய்ய உள்ளதால், இம்மரங்களை வெட்டி செங்கல் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும், மர மில்லுக்கும் அனுப்பி வருகிறோம். தமிழக அரசு காய்ந்த தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றனர்.