×

தேவதானப்பட்டியில் டூவீலர் திருடிய 2 பேர் கைது: 2 பேருக்கு வலை: 4 டூவீலர் பறிமுதல்

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மேட்டுவளவைச் சேர்ந்த கார்த்திகேயன், தனது டூவிலர் திருடுபோனதாக தேவதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதேபோல, மாவட்டத்தில் பல இடங்களில் டூவீலர்கள் திருடுபோனதாக புகார்கள் வந்தன. இதையடுத்து டூவீலர் திருடும் கும்பலை பிடிக்க எஸ்பி எஸ்பி.,சாய்சரண்தேஸ்வி உத்தரவின்பேரில், பெரியகுளம் டிஎஸ்பி முத்துக்குமார் மேற்பார்வையில், தேவதானப்பட்டி எஸ்ஐ. இத்ரிஸ்கான் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், கெங்குவார்பட்டி கம்பெனி பிரிவில், தனிப்படை போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது நம்பர் பிளேட் இல்லாத டூவீலரை ஓட்டி வந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் தேவதானப்பட்டி மேட்டுவளவைச் சேர்ந்த சூர்யா (22) என்பதும், அவர் ஓட்டி வந்தது, அதே பகுதியில் திருடுபோன டூவீலர் என்பதும் தெரிய வந்தது. மேலும், விசாரணையில், ‘சூர்யாவுடன் அவரது நண்பர்கள் தேவதானப்பட்டி வெள்ளையன், கிருஷ்ணகுமார் மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (29) ஆகியோர் மாவட்டத்தில் பல இடங்களில் டூவிலர்களை திருடியது தெரிய வந்தது. இது தொடர்பாக சூர்யா மற்றும் விக்னேஷ்வரனை கைது செய்து, அவர்களிடம் இருந்து நான்கு டூவிலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள வெள்ளையன் மற்றும் கிருஷ்ணகுமாரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Devadanapatti , Devadanapatti, two-wheeler, 2 people who stole, arrested
× RELATED மனைவி பணம் தராததால் விவசாயி தற்கொலை