டெல்லி: மக்களின் உரிமைகள் பாதுகாப்பதிலும், நாட்டின் நலனுக்காகவும் நீதித்துறை எப்போதும் தனது கடமையைச் செய்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார். குஜராத் உயர்நீதிமன்றத்தின் வைரவிழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். குஜராத் நீதிமன்றம் இந்திய நீதி அமைப்பு மற்றும் இந்தியாவின் ஜனநாயகம் இரண்டையும் பலப்படுத்தியுள்ளது என உரையாற்றினார். அரசியலமைப்பைப் பாதுகாக்கும் பொறுப்பை நமது நீதித்துறை நிறைவேற்றியுள்ளது என கூறினார். இன்று ஒவ்வொரு குடிமகனும் முழுமையான திருப்தியுடன் சொல்ல முடியும். நாட்டில் உலகத் தரம் வாய்ந்த நீதி அமைப்பைக் கட்டியெழுப்ப நீதித்துறை செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
நம்முடைய நீதித்துறை எப்போதுமே அரசியலமைப்பை மேலும் வலுப்படுத்தவும் நேர்மறையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் விளங்கி வருகிறது என கூறினார். இது நாட்டின் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக இருந்தாலும் அல்லது தேசிய நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய எந்தவொரு சூழ்நிலை ஏற்பட்டாலும் நீதித்துறை எப்போதும் தனது கடமையைச் செய்து வருகிறது என்றார். முன்னதாக உயர்நீதிமன்றம் அமைக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் வகையில் அஞ்சல் தலை ஒன்றையும் அவர் வெளியிட்டார்.