நெல்லை மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது 2,972 வாக்குச்சாவடிகள் இருந்தன. தென்காசி மாவட்டம் தனியாக பிரிந்த பிறகு முதன்முறையாக நடக்கும் இந்த சட்டசபை தேர்தலில் 1475 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதற்காக மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜால்னா மாவட்டத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து வரப்பட்டன. 3 ஆயிரத்து 335 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2 ஆயிரத்து 550 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2 ஆயிரத்து 746 விவிபேட் இயந்திரங்கள் என மொத்தம் 8 ஆயிரத்து 631 இயந்திரங்கள் பெங்களூரு பெல் நிறுவன பொறியாளர்களால் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் முதல் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பின்னர் அரசியல் கட்சிகளின் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவும் நடத்தப்பட்டது. இதில் 16 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 44 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 93 விவிபேட் இயந்திரங்களும் என மொத்தம் 153 இயந்திரங்கள் பழுதாகி இருப்பது தெரியவந்தது. இதை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவும் ஆய்வு செய்தார். இந்த இயந்திரங்கள் பெங்களூரு பெல் நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பப்படுகிறது.