தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறுவதையொட்டி அரசியல் கட்சியினர் பரபரப்பு பிரசாரம், வாக்கு சேகரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக கட்சிக்கு வெற்றிவாய்ப்பை ஏற்படுத்தும் தொகுதிகளை பாஜகவினர் கேட்பதாக அதிமுக தரப்பில் கூறப்படுகிறது. அந்த வகையில் சென்னை துறைமுகம் தொகுதியை பாஜவுக்கு ஒதுக்கும்படி கேட்டுள்ளனர். தமிழக பாஜக இளைஞரணி செயலாளர் வினோஜ் பி.செல்வம், வக்கீல் கிரிநாத் ஆகியோரும் கடந்த முறை பாஜ சார்பில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணா நதானியும் துறைமுகம் தொகுதியை தங்களுக்கு ஒதுக்கும்படி கேட்டுள்ளனர். இதனிடையே, அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளரும் அதிமுக மாவட்ட செயலாளருமான பாலகங்கா துறைமுகம் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு வருகிறார். மேலும் அமுமுக சார்பில் மாவட்ட செயலாளர் சந்தான கிருஷ்ணனும் துறைமுகம் தொகுதியில் போட்டியிட போவதாக கூறப்படுகிறது. துறைமுகம் தொகுதி அதிமுகவுக்கா, பாஜகவுக்கா என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.