கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறாரே? முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்த பல்வேறு 110 அறிவிப்புகள் இன்னும் நிலுவையில் தான் இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், திருவாரூர் மாவட்டம் தொழுதூரில் நவீன அரிசி ஆலை ரூ.20 கோடியில் அமைக்கப்படும் என்றார்கள். அதை கூட நடைமுறைப்படுத்தவில்லை. இப்போது ரூ.12,110 கோடிக்கு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லியதால் அதிமுக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளதா? திமுக ஆட்சிக்கு வந்தால் தள்ளுபடி செய்வோம் என்றோம். செய்து இருக்கிறோம். இப்போதும் கூட விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி செய்வோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உள்பட பல்வேறு சலுகைகளை திமுக அரசு அறிவித்தது. விவசாயிகளுக்கு நன்மை செய்த அரசு என்றால் அது திமுக தான். ஆனால், திமுக தலைவர் அறிவித்ததை தான் தொடர்ந்து இப்போது அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் நிறைய பேர் கடன் வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் கடன் என்ன ஆகும்? தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன் என்ன ஆகுமோ என்று தெரியவில்லை. அரசு விவசாயிகளுக்கான பயிர் கடன் மட்டும் தான் தள்ளுபடி செய்யப்படும் என்று சொல்லியிருக்கிறது. நிலத்தை சமப்படுத்துவதற்காக கடன் வாங்கியிருப்பார்கள் அதை தள்ளுபடி செய்யவில்லை. தலைவர் கலைஞர் ஆட்சியில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. சொல்ல போனால் டிராக்டர் கடன் வரை தள்ளுபடி செய்தார். தமிழக அரசிடம் போதிய நிதி உள்ளதா?
விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் ரூ.12,110 கோடியை தள்ளுபடி செய்ய நிதி எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஏற்கனவே, தமிழக அரசு 5 லட்சம் கோடி கடனில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ரூ.12,110 கோடிக்கான பணம் இங்கே இருக்கிறது என்று சொன்னால் நம்பலாம். திமுக சொல்கிறது என்ற காரணத்தால் இப்போது செய்கிறார்கள். திமுக நிதியை திரட்டி விட்டு அறிவிப்போம் என்றது. ஆனால், அவர்கள் அவ்வாறு சொல்லவில்லை. வர உள்ள பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். வர உள்ள பட்ஜெட் இந்த அரசின் இடைக்கால பட்ஜெட். இடைக்கால பட்ஜெட்டில் இவ்வளவு தொகையை ஒதுக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை.